
தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டதில் லேசாக இல்லை கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.அப்படி இப்படியென திருப்பப் பட்டதில் கழுதது வலியும் சேர்ந்து கொண்டாலும் இந்த உடன்படுதல் மனதுக்கு இன்பமாகவே இருந்தது.
இருக்கிற நாலு முடியையும் ஆளுக்கொரு பக்கமாக பிரித்துக் கொள்வதில் ஆரம்பித்த சண்டை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.எல்லைப் பிரச்சினை போல தீவிரமாகி அங்கும் இங்கும் ஒரு சில முடிக்கற்றைகள் இழுபட்டுக் கொண்டிருந்தன.உரிமைப்போராட்டத்தின் உச்சம் அதிகரிக்கும் போதெல்லாம் வலியின் தீவிரமும் அதிகரிக்கவே செய்தது.
அவ்வப்போது தங்கையும் ,தம்பி மனைவியும் வந்து சமாதானம் செய்ய வேறு செய்தனர்.அத்தை உங்களுக்கு நான் சடை பின்னி விடட்டுமா என்று ஆரம்பித்த தம்பி பொண்ணோட கெஞ்சலும் அதைத் தொடர்ந்து பெரியம்மா நான்தான் பின்னி விடுவேன் என்று பங்கு கேட்ட தங்கை பொண்ணோட உரிமைக்குரலும் என் ஒப்புதலுக்கும் காத்திராமல் இப்படி தலை வாரும் யுத்தத்தில் ஆரம்பித்து, ஒருவழியாக வலது பக்கம் உனக்கு இடது பக்கம் எனக்கு என பங்கு பிரிக்கப்பட்ட து.
சின்ன பிள்ளையாய் இருக்கும் போதே பல நாட்கள் நானாகவேதான் பின்னல் போடவேண்டியிருந்தது. வேலைக்குப் போகும் அம்மா காலை நேரத்து அவசரத்தில் நேரமில்லை என அடிக்கடி முடியை வெட்டி விட்டு ஆம்பிளை பிள்ளை போல'கிராப்' விட்டதால்,முடி வளர்க்கும் ஆசையில் சுயமாக சடை பின்ன முயற்சித்து கற்றுக் கொண்டது.
எப்போதாவது ஊரிலிருந்து வரும் பாட்டி வழிய வழிய தலைக்கு எண்ணை வைத்து இறுக்கி பின்னல் போட்டு உச்சம் தலையில் ஆரம்பித்து நுனி வரை உள்ளங்கையால் அழுத்தியபடி 'பாம்பா, தேளா?' னு கேட்பார். ஆரம்பத்தில் ஏன் அப்படி கேட்கிறார்னு புரியாமல் இருக்க, அவரே சொல்லுவார் பாம்புனு சொல்லு அப்பத்தான் பாம்பு மாதிரி நீளமாக முடி வளரும் என்பார்.
இப்பெல்லாம் ஒற்றை சடை போடவே போதிய முடியில்லையென அப்படியே சேர்த்து கிளிப் போட்டுப் போகும் நிலையில் 'ரெட்டை சடையா' என நாத்தனாரும் ஓரகத்தியும் சிரித்தபடி கமெண்ட் அடிக்க சடை பின்னல் கைவிடப் பட்டு,போனி டெய்லாக ஆரம்பிக்கப் பட்டது.
வலது பக்கம் வாரிவிட்டு தம்பி பொண்ணு பேண்டை மாட்டும்போது அந்தப் பக்கம் சாய, ஏய் நீ உன் பக்கம் இழுத்தால் நான் எப்படி வாருவது என தங்கைப் பொண்ணு இடப் பக்கம் இழுக்க ஆ வென வலியில் கத்தியதைக் கேட்டு எட்டிப் பார்த்த ஓரகத்தி இது தேவையா என்றாள்.இதுக்குத்தான் நான் சம்மதிக்கலை.விரட்டிவிட்டேன் என்றாள் தங்கை.நானும் தான் .இவங்க கொடுக்கிற செல்லம்தான் இந்தக் கூத்தடிக்கிறதுங்க என்றாள் தம்பி மனைவி.
சின்னப் பிள்ளையாக இருக்கும் போது இப்படியோரு வாய்ப்புக்காக ஏங்கியதுண்டு. நரைத்த தலை பாட்டிகளும்,எண்ணை சிக்கு ஆயாம்மாக்களும் தள்ளுபடி.சின்னப் பொண்ணுங்களுக்கு நோ சான்ஸ். அந்த குட்டி முடியில் சடை பின்ன விரும்பியதில்லை. அதனால்தான் இன்று இந்தக் குழந்தைங்க ஆசைக்கு சம்மதிக்க முடிந்தது.
ஒருவழியாக ஆளுக்கொரு பக்கம் குதிரைவால் கொண்டை போட்டு முடிக்க,அது 180 டிகிரி நேர்க்கோட்டில் இல்லாமல்,வலது பக்கம் இறங்கி, இடது பக்கம் உயர்ந்தும் நின்றது.சிவபெருமான் கைலாயத்தில் திருமணம் முடிக்கும் போது தேவாதி தேவர்களெல்லாம் அங்கு குழுமியிருக்க வடதிசை தாழ்ந்து தெற்கு உயர்ந்து போக ,சிவன் அகத்தியரை அனுப்பி வைத்து பாலன்ஸ் பண்ண சொல்வதாக சினிமாவில் வரும்.இங்கும் அப்படியொரு நிலைமை. ஒருவழியாக ஏற்ற இறக்கங்கள் சரி செய்யப்பட்டது.
அய் அத்தை ஜ்ஜோதிகா போல அழகா இருக்காங்க
இல்லை மேக்டரீனா பாட்டுல வர்ற ஷில்பா ஷெட்டி மாதிரிதான் இருக்காங்க னு அடுத்த யுத்தம்.
ரெட்டை சடை போட்ட அருக்காணி மாதிரி இருந்தாலும் தங்களுடைய கைவண்ணம் நல்லாருக்குனு சொல்லிக்க ஜோதிகா,ஷில்பா ,இன்னும் சில ரெட்டைசடை நடிகைகள் நினைவு கூறப்பட்டனர்.
அடுத்து ஆரம்பித்தது மேக்கப் படலம். முடியும் வரை கண்ணைத் திறக்கக் கூடாதுன்னு உத்தரவு வேறு.வலப் பக்கத்துக்காரி பட்டர்பிளை வடிவ ஹேர் பின்னை பொருத்த இடப்பக்கத்துக்காரி கொஞ்சம் ஓவராகப் போய்,கல்லு வச்ச இமிட்டேஷன் நெத்திச் சுட்டியை மாட்டிவிட,அது ஒரு பக்கமாகத் தொங்க கிட்டத்தட்ட குஷி ஜோதிகாவிலிருந்து லகலக சந்திரமுகியாக்கப் பட்டேன். முகத்துக்கும் ஒப்பனை ஆரம்பமானது. பவுடர் ,லிப்ஸ்டிக்,பொட்டு எல்லாம் போக பெரிய சைஸ் திருஷ்டிப் போட்டும் வைக்கப் பட்டதில் நிஜமாலுமே ஒரு திருஷ்டி பூசணிக்காய் ரேஞ்சுக்கு மாற்றப் பட்டேன்.
இடையிடையே வந்து பார்த்து சிரித்து விட்டுப் போன உறவுகளின் கேலி வேறு.
எல்லாம் முடிந்து கண்ணாடி முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டபோது ,மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்துக்கொண்டேன்.
யாரைப் போல இருந்தேன்.மற்றவர்கள் எப்படி கேலி செய்து சிரித்தார்கள் என்பது முக்கியமில்லை.
கண்டிப்பான அத்தையாக,பெரியம்மாவாக இருந்தவள் ஒரு எல்கேஜி குழந்தை போல கட்டுப்பட்டு அவர்களின் இழுப்புக்கு இசைந்து கொடுத்ததில் அந்தக் குழந்தைகளுக்கு இருந்த பரவசம் பெருமையாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட சந்தோஷம் ஒன்று போதும்.
தலைவாரி பூச்சூடி அலங்கரிப்பதில் அன்னையராக மாறிப் போன பிஞ்சுகளால் கிடைத்த சந்தோஷம் அனுபவித்து அறிய வேண்டிய ஒன்று.
மொத்தப் பதிவுகளும் இங்கே
வகை*
அனுபவம்
| 30 Comments
Subscribe to:
Posts (Atom)








